இன்றைய இறைமொழி
ஞாயிறு, 26 ஜூலை 2026
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு
புனிதர்கள் சுவக்கிம்-அன்னா நினைவு
தாத்தா-பாட்டியர், மூத்தோர் உலக நாள்
1 அர 3:5, 7-12. உரோ 8:28-30. மத் 13:44-52
முழுமையாக முதன்மையாக முறைமையாக
இன்று ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு. ஜூலை மாதம் 26-ஆம் தேதி இயேசுவின் தாய் வழி தாத்தா-பாட்டியான புனிதர்கள் சுவக்கீம்-அன்னாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். இன்றைய நாளை தாத்தா-பாட்டியர் மற்றும் மூத்தோர்க்கான 6-ஆவது உலக நாள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த நாளுக்கான செய்தியை, ‘நான் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை’ என்னும் மையக்கருத்தில் வழங்கியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மனிதர்களாகிய நம்மை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது தெரிவு. விலங்குகள் தங்களுக்குள் ப்ரோக்ராம் செய்துள்ளபடியே இடங்களையும் உணவையும் தெரிவுசெய்கின்றன. மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு பொழுதும் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்தச் சுதந்திரம் நமக்கு வரமாகவும் சில நேரங்களில் சாபமாகவும் மாறுகிறது. ஏனெனில், தவறான தெரிவுகள் நமக்கு துன்பத்தையும் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
விண்ணரசு பற்றிய மூன்று எடுத்துக்காட்டுகளை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்: புதையல், முத்து, வலை. புதையல் மற்றும் முத்து என்னும் உவமைகள் விண்ணரசு பற்றிய மறைபொருளையும், வலை விண்ணரசு மற்றும் உலகின் இறுதி பற்றிய செய்தியையும் தருகிறது.
இன்றைய உவமைகளை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாதது போலவே இருக்கிறது. மூன்று உவமைகளும் வௌ;வேறு ‘அர்த்த வளையங்களைச்’ (ளநஅயவெiஉ கநைடன) சார்ந்தவை. புதையல் நிலத்தில் கண்டெடுப்பது. முத்து கடலில் கண்டெடுப்பது. வலை கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் மாறி மாறிச் செல்வது.
இந்த மூன்று உவமைகளையும் மூன்று வார்த்தைகளில் அடக்கி விடலாம் என நினைக்கிறேன்: முழுமை, முதன்மை, முறைமை. (அ) முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும். (ஆ) முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டும். (இ) முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(அ) முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும் – புதையல் உவமை
இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் திருடர்களுக்கு அஞ்சுகிற பெருஞ்செல்வர்களும், நீண்ட பயணம் செல்பவர்களும் தங்களுடைய செல்வங்களை நிலத்தில் புதைத்துவிட்டுச் செல்வது வழக்கம். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது பலர் தங்களுடைய செல்வங்களை தங்களுடைய வயல்களில் புதைத்துவிட்டுச் சென்றார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிலங்கள் கைமாறி நிலத்தை உழுகிற ஒருவர், மரம் நடுகிறவர் இப்படிச் சிலருடைய கண்களில் புதையல் தென்பட்டது. இப்படிப்பட்ட நிகழ்வையே முதல் உவமையில் வாசிக்கிறோம். ஒருவர் புதையலைக் கண்டுபிடிக்கிறார் எதார்த்தமாக. இது அவருக்கு ஓர் ஆச்சர்யமாக அவர் கண்களில் படுகிறது. புதையலை மட்டும் எடுத்துக்கொண்டால் அது திருட்டை ஒத்ததாகும். எனவே, அந்த நபர் முழு நிலத்தையும் வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு என்பது வெறுமனே நம் கண்ணில் படக்கூடிய பொருள் என்றாலும் அதை நமக்கு உரிமையாக்க வேண்டுமெனில் நாம் நமக்குள்ளதையெல்லாம் இழக்க வேண்டும்.
(ஆ) முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் – முத்து உவமை
வணிகர் ஒருவர் நல்முத்தைத் தேடுகிறார். இவருடைய தேடலுக்கான நோக்கம் இருக்கிறது. முயற்சி செய்து தேடுகிறார். நல்முத்தைக் கண்டுபிடிக்கிறார். நல்முத்தைப் பெற எம்முத்தையும் இழக்க முன்வர வேண்டும். நல்முத்தைக் கண்டும் பெற்றுக்கொள்ளாமல் பிறமுத்துக்களை வைத்திருத்தல் சால்பன்று. நல்முத்தைத் தேடுபவரே நல்முத்தைக் காண முடியும். இல்லத்தில் அமர்ந்துகொண்டே எல்லாம் கிடைக்கும் என நினைப்பது சிறப்பன்று. விண்ணரசையும், வாழ்க்கையையும் தேட வேண்டும். தேடிக் கண்டவுடன் வைத்திருப்பதை இழக்க வேண்டும். ‘இதுவும் வேண்டும்! அதுவும் வேண்டும்!’ என்ற பிளவு மனநிலை இறைவனின் டிக்ஷனரியில் கிடையாது. ‘தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்தேனே!’ – இந்தப் பழைய முத்துக்களை இழக்க வேண்டுமா? என நினைக்காமல் இழக்கத் துணிவோரே நல்முத்தை உரிமையாக்க முடியும்.
(இ) முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் – வலை உவமை
கடலில் வீசப்படும் வலை அனைத்து வகை மீன்களையும் பாசிகளையும் சிப்பிகளையும் செடிகளையும் குப்பைகளையும் அள்ளிக்கொண்டு வருகிறது. கடல் பெரியதுதான். ஆனால், கையில் உள்ள பாத்திரம் சிறியது. தேர்ந்து தெளிந்து முறைப்படுத்தியே பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சுமை கூடிவிடும். பாத்திரம் உடைந்துவிடும். விண்ணரசின் உரிமையாளராக இருக்கிற ஒருவர் தொடர்ந்து பகுத்தாய்ந்து தெரிவு செய்ய வேண்டும். முறைமையானது எதுவோ அதையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். அவற்றுள் நல்லது-தீயது எனப் பகுத்துப் பார்த்து முறைமையானதைச் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் காலப்போக்கில் அழுகிய மீன்கள் நல்ல மீன்களையும் கொன்று விடும்.
இந்த மூன்று உவமைகளுக்குப் பொதுவானது என்ன? மேலானதைப் பெற தாழ்வானதை இழக்க வேண்டும். இறையரசையும் மற்ற அனைத்தையும் ஒப்பிடும்போது மற்றது தாழ்வே.
இன்றைய முதல் வாசகத்தில் அரசர் சாலமோன் நமக்கு ஒரு முன்மாதிரியாக வருகிறார். ஆண்டவராகிய கடவுள் அவரிடம் கனவில் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்கிறார். நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து மக்களுக்குத் தீர்ப்பளிக்கும் ஞானத்தைக் கேட்கிறார் சாலமோன். நீடித்த வாழ்வு, செல்வம், எதிரிகளின் அழிவு ஆகியவற்றை வரமாகக் கேட்காமல், கடவுளையும் கடவுளின் ஞானத்தையும், கடவுளின் மக்களையும் தேர்ந்துகொண்டதற்காக அவரைப் பாராட்டுகிறார் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் வாசகத்தில், உரோமையருக்கு எழுதக்கூடிய பவுல், ‘கடவுள்மீது அன்பு கூர்பவர்களோடு, அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களோடு தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்’ என்கிறார். ‘சினர்ஜி’ (கூட்டாற்றல்) என்னும் சொல்லை இங்கே பயன்படுத்துகிறார் பவுல். மனித ஆற்றலோடு கடவுளின் வல்லமை – ஆவியார் – சேரும்போது நம் வாழ்க்கை பன்மடங்கு ஆற்றல் பெறுகிறது.
இன்றைய நாள் நமக்கு வழங்கும் பாடம் ஒன்றுதான்: தாழ்வானதை விடுத்து மேன்மையானதைப் பற்றிக்கொள்வது.
இதை எப்படி அடைவது?
(அ) வாழ்வு பற்றிய அறிதலுணர்வும் விழிப்புணர்வும். நம் கண்களில் படுகிற புதையல், முத்து, நல்ல மீன்கள், ஞானம் ஆகியவை பற்றிய அறிதலையும் தொடர் விழிப்புணர்வையும் நாம் கொண்டிருத்தல் வேண்டும்.
(ஆ) தாழ்வானதை இழப்பதற்கான துணிச்சல். பொருளாதார இயலில் ‘இழப்பு குறித்த தயக்கம்’ என்று ஒரு கருத்துரு உண்டு. இதன்படி மக்கள் தங்களுக்கு வரக்கூடியது நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், தங்களிடம் உள்ளதை இழக்கத் தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில், எதிர்காலம் பற்றிய உறுதியற்ற நிலை. புதையல் நம் கைகளில் கிடைத்தாலும், ஒருவேளை அது செல்லாக் காசுகளாக இருக்குமோ என்று பயப்படுவது. விலையுயர்ந்த முத்து கிடைத்தாலும், ஒருவேளை இது போலியாக இருக்குமோ என்று பயப்படுவது. நல்ல மீன் கிடைத்தாலும், இது மட்டும் போதுமா என்று பயப்படுவது. இப்படிப்பட்ட பயங்கள் நம் துணிச்சலைச் சீர்குலைக்கின்றன. பின்னர் தேவைப்படும் என்று நாம் எத்தனை குப்பைகளை வீட்டிலும், கணினியிலும், மூளையிலும் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்.
(இ) கடவுளுடைய ஆவியாரின் ஒத்துழைப்பு. கடவுள் தரக்கூடிய ஞானத்தையும் தூய ஆவியாரின் ஒத்துழைப்பையும் வேண்டிப் பெறுவது. கடவுளின் ஞானத்தைக் கொண்டே நாம் நம் வாழ்வின் கேள்விகளுக்கு விடை காண இயலும். கடவுளால் நாம் அன்புசெய்யப்படும்போது தூய ஆவியார் நம்மோடு ஒத்துழைக்கிறார்.
இன்றைய நாளில் நாம் கொண்டாடும் புனிதர்கள் சுவக்கீமும் அன்னாவும் – யாக்கோபின் முன் நற்செய்தி, மரியாவின் குழந்தைப் பருவ நற்செய்தி – ஒவ்வொரு பொழுதும் ஆண்டவராகிய கடவுளைத் தெரிவு செய்கிறார்கள்.
நம் குடும்பங்களில் உள்ள தாத்தா-பாட்டியரையும், நம் சமூகத்தின் மூத்தோர்களையும் இன்றைய நாளில் கொண்டாடுவோம். அவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்தவர்கள். தங்களுடைய முதன்மைகள் வழியாக தங்கள் வாழ்வை நெறிப்படுத்தியவர்கள். இவர்களுடைய உடல்நலக்குறைவு, தயக்கம், சோர்வு, தளர்ச்சி ஆகியவற்றில் நாம் அவர்களுக்குத் துணைநிற்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment