இன்றைய இறைமொழி. சனி, 11 ஜூலை 2026. அச்சமும் அழைத்தலும்

இன்றைய இறைமொழி
சனி, 11 ஜூலை 2026
பொதுக்காலம் 14-ஆம் வாரம்
எசா 6:1-8. மத் 10:24-33

அச்சமும் அழைத்தலும்

திருத்தூதுப் பொழிவு அல்லது மறைத்தூதுப் பொழிவின் ஒரு பகுதியாக இருக்கிற இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, ‘அஞ்ச வேண்டாம்!’ என்று தம் திருத்தூதர்களுக்கு அறிவுறுத்துகின்றார். பணிக்கு அனுப்பப்படுகிற திருத்தூதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நிராகரிப்பைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ‘சிட்டுக்குருவி, தலைமுடி’ என்னும் சொல்லோவியங்கள் வழியாகக் கடவுளின் உடனிருப்பையும் பாதுகாப்பையும் எடுத்துரைக்கிறார்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவின் அழைத்தல் நிகழ்வை வாசிக்கிறோம். ஆண்டவரின் திருமுன்னிலையில் தன் தாழ்நிலையை அழுக்கு என்று நினைத்து அச்சம் கொள்கிறார் இறைவாக்கினர். காட்சி ஒன்றின் வழியாக அவரைத் தூய்மையாக்குகிறார் கடவுள். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ என்ற கேள்வியைக் கடவுள் கேட்டபோது, ‘நானிருக்கிறேன். என்னை அனுப்பும்’ என முன்வருகிறார் இறைவாக்கினர்.

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அச்சம் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தடுத்த நிறுத்தக் கூடாது. நம்மை அழைத்த கடவுள் நம் அச்சங்களைவிடப் பெரியவர்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment