இன்றைய இறைமொழி
சனி, 16 மே 2026
பாஸ்கா ஆறாம் வாரம்
திப 18:23-28. யோவா 16:23-28
தந்தையிடம் செல்கிறேன்!
நாளைய தினம் இயேசுவுடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் விண்ணேற்றத்தை நமக்கு அறிமுகம் செய்வதாக நிறைவேறுகிறது இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி: ‘நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.’
இயேசுவின் மனுவுருவாதலும் அவருடைய விண்ணேற்றமும் ஒன்றோடொன்று பொருந்துகிற நிகழ்வுகளாக இருக்கின்றன. வானிலிருந்து இறங்கி வந்த இயேசு வானுக்கு ஏறிச் செல்கிறார். ‘கடவுள் நம்மோடு’ என்று இறங்கி வந்தவர் ‘கடவுள் நமக்காக’ என்று ஏறிச் செல்கிறார்.
‘உலகு’ என்பது கடவுள் இயங்கக்கூடிய தளமாகவும், சில நேரங்களில் கடவுளுக்கு எதிரான காரணியாகவும் இருக்கிறது.
‘தந்தை உங்கள்மீது அன்புகொண்டுள்ளார்’ என்னும் செய்தியைத் தந்துவிட்டுச் செல்கிறார் இயேசு.
தந்தையின் அன்பு பெற்ற ஒருவர் அதை மற்றவரோடு பகிர்ந்துகொள்கிறார், மற்றவர்களுக்கு ஊக்கம் தருகிறார். இப்படிப்பட்ட நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். அப்பொல்லா என்னும் நபர் கடவுளின் நற்செய்திப் பணிக்காக முன்வருகிறார்.
இயேசு கொண்டு வந்த மாற்றம் இவ்வாறாக ஒவ்வொருவர் வழியாகத் தொடர்கிறது.
நாம் வாழும் இந்த உலகில் மாற்றத்தைக் கொண்டு வரும்போது நாமும் இயேசுவின் பணியை ஆற்றுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment