இன்றைய இறைமொழி
செவ்வாய், 28 ஜூலை 2026
பொதுக்காலம் 17-ஆம் வாரம்
எரே 14:17-22. மத் 13:36-43
வயல் இவ்வுலகம்!
வயலில் தோன்றிய களைகள் உவமைக்கான இயேசுவின் விளக்கமே இன்றைய நற்செய்தி வாசகம். ‘வயல் இவ்வுலகம்’ என்கிறார் இயேசு. இறையாட்சி இவ்வுலகம் சார்ந்தது. இவ்வுலகம் என்னும் வயலிலிருந்து அதைப் பிரித்தோ, உயர்த்தியோ பார்க்கக் கூடாது. இவ்வுலகின் எதார்த்தங்களும், நிகழ்வுகளும், நபர்களும் இறையாட்சியைப் பாதிக்கவே செய்கிறார்கள்.
முதல் வாசகத்தில், யூதா நாட்டு மக்கள் அனுபவித்த நாடுகடத்தலின் வலியைப் பற்றி எழுதுகிறார் எரேமியா. ‘இறைவாக்கினர்களும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்’ என்னும் சொற்கள் புலம்பெயர்தலின் வலியை எடுத்துரைக்கின்றன. இன்று ஒட்டுமொத்த உலகம் ஒரு கிராமம் என்று கருதப்பட்டாலும், ஒவ்வொரு நாடும் இடமும் புலம்பெயர்பவருக்கு அந்நியமாகவே தெரிகின்றன. முன்பின் தெரியாத நாட்டில் அலைந்து திரிவது என்னும் சொல்லாடல் ஒருவரின் கையறுநிலையையும் நொறுங்குநிலையையும் குறிக்கிறது.
மானிட மகன் களைகளை வளர விட்டுப் பார்க்கிறாரே தவிர, அதை உடனடியாக அழிக்க முயற்சி செய்யவில்லை.
இவ்வுலகம் என்னும் வயல் இருக்கும் வரைக்கும் களைகளும் இருக்கும், நாடுகடத்தலும் இருக்கும், வலியும் இருக்கும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.
ஒரு நாள் களைகள் எல்லாம் களையப்படும். அன்றைய நாளில் நாமும் அறுக்கப்பட்டிருப்போம்!
சில விவிலியப் பகுதிகள் வாழ்வின் கேள்விகளுக்கு விடை தருவதற்குப் பதிலாக, புதிய கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்புகின்றன.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment