இன்றைய இறைமொழி
ஞாயிறு, 7 ஜூன் 2026
கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் – பெருவிழா
இச 8:2-3, 14-16. திபா 147. 1 கொரி 10:16-17. யோவா 6:51-58
உங்களுக்குப் பசியைத் தந்தார்!
இன்று கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நற்கருணைத் திருவிழா என்றும் இது அழைக்கப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் ஒரு வாக்கியத்தையே நம் சிந்தனையின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்வோம்: ‘உங்களுக்குப் பசியைத் தந்தார்!’
பசி என்பது அனைத்து உயிர்களின் அடிப்படையான உணர்வு. பசி வரும்போது மற்ற உணர்வுகள் செயல் இழக்கின்றன. நாம் வலிமையற்றவர்களாக மாறுகிறோம். பசியின் கொடுமையை திருவள்ளுவர் இப்படியாகச் சொல்கிறார்:
‘இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு’ (குறள் 1048)
பொருள்: நேற்று என்னைக் கொல்வதுபோலத் துன்புறுத்திய வறுமையும் பசியும் இன்றும் என்னைத் தேடி வருமோ என்று ஏழை மனிதன் தினமும் அஞ்சி நடுங்குவான்.
பசி ஒருவருக்கு இறப்பு உணர்வைத் தருகிறது.
பசியை உணவால் மட்டுமல்ல, உறவாலும், கடவுளின் உடனிருப்பாலும் போக்க முடியும் என்று கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
(அ) இறையியல் விளக்கம்
‘நற்கருணையே திருஅவை வாழ்வின் ஊற்று, மையம், உச்சம்’ என்று கற்பிக்கிறது நம் திருஅவை. நம் திருஅவையின் மறைக்கல்வி, நற்கருணையை மூன்று சொற்கள் வழியாக எடுத்துரைக்கிறது.
(1) உணவு (Meal / Food)
நற்கருணை என்றால் உணவு. ‘நானே வாழ்வுதரும் உணவு’ என்று தம்மையே முன்மொழிந்த இயேசு, இறுதி இராவுணவில் ‘இது என் உடல்’ என்று சொல்லி நற்கருணையை ஏற்படுத்துகிறார். ‘அப்பத்தின் வீடு’ (பெத்லகேம்) என்னும் ஊரில் பிறந்த இயேசு நாம் உண்ணும் அப்பமாகவே மாறுகிறார். அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையான ஓர் உணர்வு பசி. அந்தப் பசி போக்குகிற உணவாகத் தம்மையே முன்மொழிகிறார் இயேசு.
(2) பலி (Sacrifice)
நற்கருணையில் நாம் இயேசுவின் கல்வாரிப் பலியை நினைவுகூர்கிறோம். கல்வாரிப் பலியை நாம் திரும்பவும் நிறைவேற்றுவதில்லை. ஏனெனில், இயேசுவின் பலி ஒரே பலியாக, நிறைவான பலியாக கல்வாரியில் நிறைவேறப்பட்டுவிட்டது. அந்நிகழ்வை நாம் திருப்பலியில் நினைவுகூர்கிறோம். ஆகையால், நற்கருணைக் கொண்டாட்டத்தை ‘திருப்பலி’ என்று அழைக்கிறோம்.
(3) உடனிருப்பு (Real Presence)
இயேசு நற்கருணையில் பிரசன்னமாகி நம்மோடு உடனிருக்கிறார். நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் பிறகும் அவருடைய பிரசன்னம் அப்பத்தில் தொடர்கிறது.
திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், நற்கருணை குறித்துக்காட்டுகிற மகிழ்ச்சியை எடுத்துரைக்கிறார்: ‘ஓர் அரசனின் உடனிருப்பு அந்த நாட்டு மக்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் தருகிறது. அதுபோல, இயேசுவின் உடனிருப்பு நமக்கும் நம் நகரத்துக்கும் மகிழ்ச்சி தருகிறது.’
திருத்தந்தை பிரான்சிஸ், நற்கருணையை ‘வியப்பின் அருளடையாளம்’ என அழைக்கிறார். ஏனெனில், அனைத்தையும் கடந்த கடவுள் தம்மையே ஓர் அப்பத்துக்குள் சுருக்கிக்கொள்ளும் அளவுக்கு இறங்கி வருகிறார்.
திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘நற்கருணை மற்றவர்களின் பசி போக்க உழைக்குமாறு நம்மைத் தூண்டுகிறது’ என்கிறார்.
(ஆ) வாசகங்கள் விளக்கம்
(1) பசி போக்கும் உணவு (முதல் வாசகம்)
இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம், ‘அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு … மன்னாவினால் உங்களுக்கு உணவூட்டினார்’ என மொழிகிறார்.
இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களை ஒன்றாகக் கூட்டி, ஆண்டவரின் அரும்பெரும் செயல்களை எடுத்துரைக்கிறார். ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த பயிற்சிகளில் ஒன்று, அவர்களுடைய தன்நிறைவு உணர்வை அகற்றுவது. பசி என்பது அடிப்படையான உந்துணர்வு. இந்த உந்துணர்வால் நாம் வருந்தும்போது மற்றவர்கள்மேல் கொண்டிருக்கிற சார்புநிலையை உணர்கிறோம். ‘அப்பம்’ என்பது ஒருவர் தம் சொந்த உழைப்பால் உருவாக்குவது – கோதுமை பயிர் செய்து, மாவு எடுத்து, எண்ணெய் சேர்த்து, சுட்டு உருவாக்குவது. ‘மன்னா’ கடவுளுடைய சொற்களால் பெய்வது. தங்களால் அல்ல, மாறாக, கடவுளால்தான் தங்கள் இருத்தல் சாத்தியமாகிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும், நினைவில் நிறுத்த வேண்டும், மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
இப்படியாக, மனிதர்களின் பசியைப் போக்குகிறது உணவு.
(2) பசி போக்கும் தோழமை (இரண்டாம் வாசகம்)
இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகரில் ‘அப்பம் பிட்குதல்’ நிகழ்வில் காணப்பட்ட பிறழ்வைக் கண்டித்துத் திருத்துகிறார் பவுல். இந்த மடலில் பல பிறழ்வுகளை – பிரிவினை, பாலியல் பிறழ்வுகள், சிலை வழிபாடு, சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, வழிபாட்டுப் பிறழ்வுகள் – கண்டித்து அறிவுறுத்துகிறார்.
‘அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!’ என்கிறார். ‘கிறிஸ்துவில்’ என்பது பவுலுடைய மடல்களில் காணப்படும் ஒரு முக்கியமான சொல். ‘கிறிஸ்துவில் பங்கேற்கிற’ நபர் கிறிஸ்துவோடு உறவாடி, நெருக்கமாகி, கிறிஸ்துவாகவே மாறுகிறார்.
தொடர்ந்து, ‘நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்’ என்கிறார். ஏனெனில், ஒரே பாத்திரத்தில் நாம் கையிட்டு உண்ணும் உணவு நமக்குள்ளே உறவை ஏற்படுத்துகிறது.
இப்படியாக, நம் பசியை உறவுகள் வழியாக நீக்க முடியும் என்கிறது இரண்டாம் வாசகம்.
(3) பசி போக்கும் கடவுள் (மூன்றாம் வாசகம்)
நற்செய்தி வாசகம், இயேசுவின் ‘நானே வாழ்வுதரும் உணவு’ பேருரையிலிருந்து தரப்பட்டுள்ளது. அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவூட்டிய இயேசு, தொடர்ந்து, ‘நானே வானினின்று இறங்கி வந்த உணவு’ என்று தம்மையே முன்மொழிகிறார். இதுவே இயேசுவின் முதல் ‘நானே’ கூற்று ஆகும்.
‘எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்’ என்கிறார் இயேசு.
‘எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்’ என்னும் வாக்கியத்தை நற்கருணையின் வழியாக இயேசு தம்மை நமக்கு வழங்குகிறார் என்றும், கல்வாரிப் பலியில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்றும் புரிந்துகொள்ளலாம்.
‘உலகு’ என்பது யோவான் நற்செய்தியில், ‘கடவுள் இயங்கும் தளமாகவும்,’ ‘கடவுளுக்கு எதிரான மனப்பாங்காகவும் இருக்கிறது.’
மேலும், இயேசுவை உண்பவர் அவரோடு ‘இணைந்திருப்பர், வாழ்வு பெறுவர்.’ யோவா 15-இல் இணைந்திருத்தலும் கனிதருதலும் இணைந்த செல்கின்றன. இயேசுவோடு இணைந்திருப்பவர் நிறைவாழ்வை இங்கேயே பெற்றுக்கொள்கிறார்கள்.
மனிதர்களின் பசியை ஆற்றக்கூடியவர் கடவுளோடு நாம் கொள்ளும் உறவு என்பது இங்கே தெளிவாகிறது.
(இ) வாழ்வியல் விளக்கம்
(1) ஒருவர் மற்றவரின் பசி போக்கும் அழைப்பு
நற்கருணை அடிப்படையில் நம் பசியை நமக்கு நினைவூட்டுகிறது என்றால், நாம் ஒருவர் மற்றவரின் பசியைப் போக்க அழைக்கப்படுகிறோம். உடல்பசி மட்டுமல்ல, அறிவுப் பசி, உணர்வுப் பசி, ஆன்மிகப் பசி என அனைத்துப் பசிகளையும் போக்க நம்மால் இயலும்.
(2) வலுவற்றவர்களின் மருந்து நம்பிக்கை
திருமணத்தை அருளடையாளமாகக் கொண்டாடதவர்களுக்கு, மணவிலக்கு அல்லது மறுமணம் செய்தவர்களுக்கு நாம் நற்கருணை வழங்குவதில்லை. ஏனெனில், அவர்கள் திருஅவையின் ஒன்றிப்பில் (கம்யூனியன்) இல்லை. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ், ‘அன்பின் மகிழ்ச்சி’ (அமோரிஸ் லெத்திட்சியா) என்னும் திருத்தூது ஊக்கவுரையில், ‘நம்பிக்கை என்பது வலிமையானவர்கள் பெறும் பரிசு அல்ல, வலுவற்றவர்கள் பெறும் மருந்து’ என்கிறார். ஒவ்வொரு நிகழ்வையும் நாம் கருத்தில்கொண்டு தேர்ந்து தெளிந்து, அவசியம் ஏற்படின் நற்கருணை வழங்கலாம் என்று பரிந்துரை செய்கிறார். நற்கருணை நம் ஆன்ம நோய் போக்கும் மருந்தாக இருக்கிறது.
(3) காண இயலாத கடவுளின் காணக்கூடிய மறைபொருள் நற்கருணை
‘இது என் உடல், இது என் இரத்தம்’ என்னும் அர்ப்பண வார்த்தைகளைச் சொல்கிற அருள்பணியாளரும் ஆயரும் திருப்பலியில், ‘நம்பிக்கையின் மறைபொருள்’ என்று அறிவிக்கிறார்கள். நம்பிக்கைக் கண்கள் கொண்டு மட்டுமே நாம் காணும் நற்கருணை கடவுள் உணர்வை நமக்குத் தருகிறது. நாம் காண்கிறவற்றையும் தாண்டிய ஒரு மறைபொருள் உள்ளது என்ற நம் தேடலை நமக்கு நினைவூட்டுகிறது.
‘எருசலேமே, ஆண்டவரைப் போற்றுவாயாக!’ என்று அழைப்பு விடுக்கிற திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 147), ‘ஆண்டவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார். உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.
நமக்கு பசியைத் தந்த நம் கடவுளே நம் பசியையும் போக்குவாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Leave a comment