இன்றைய இறைமொழி
வெள்ளி, 28 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், வெள்ளி
தானியேல் 7:2-14. லூக்கா 21:29-33
அறிந்துகொள்ளுங்கள்
இன்றைய முதல் வாசகத்தில், தானியேல் நான்கு விலங்குகளின் காட்சிகளைக் காண்கின்றார். இறுதியாக விலங்கு கொல்லப்படுகிறது. தொன்மை வாய்ந்தவர் (கடவுள்) மானிட மகனுக்கு (இஸ்ரயேல்) ஆட்சி உரிமையை வழங்குகின்றார்.
வெகுசன மக்கள் தங்கள் அடிமைத்தனமெல்லாம் மறைந்து ஒருநாள் தாங்கள் அரியணையில் அமர்வோம் என்ற அவர்களுடைய ஆசை நிறைவேறுவதாக (விஷ் ஃபுல்ஃபில்மென்ட்) (றiளா கரடகடைடஅநவெ) நினைப்பதாக நாம் இந்தக் காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், தானியேல் கண்ட காட்சி அவருடைய காலத்தில் நிறைவேறவில்லை. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதற்கான முன்சுவையாகவே இவை இருக்கின்றன.
இரு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை:
வெகுசன ஊடகங்கள் தங்கள் பாடுபொருளை முன்னிறுத்தியே பதிவுகளை இடும்.
அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் தாங்கள் விடுதலை பெற்றுக்கொள்வதாகக் காட்சிகளை பதிவிடுவர். இவை சில நேரங்களில் ‘தானாக நிறைவேறும் இறைவாக்குகளாக’ (‘ஸெல்ஃப் ஃபுல்ஃபில்லிங் ப்ராஃபஸி) மாறிவிடுவதும் உண்டு.
பல அருங்கொடை இல்லங்களிலும், ஆவிக்குரிய சபைகளிலும் தானியேல் நூலின் பகுதிகளும், திருவெளிப்பாட்டு நூல் பகுதிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் நேரடிப் பொருளாக இருக்கின்றன. ஆனால், நேரடிப் பொருளாக நாம் இவற்றைப் புரிந்துகொள்ளும்போது பாடங்களின் சூழல்களை அப்படியே தள்ளிவிடுகிறோம். அது தவறு. ஏனெனில், ஒவ்வொரு பாடமும் அதனதன் சூழலில்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
தானியேலைச் சிங்கத்தின் வாயிலிருந்து கடவுள் காப்பாற்றுவார் என்பது நமக்கு எதிர்நோக்கைத் தருமே தவிர, உத்திரவாதம் தராது. சிங்கங்களின் வாயில் கடிபட்டு இறக்கின்ற தானியேல்கள் இன்றும் நம் நடுவில் இருக்கின்றனர். அன்று அனுப்பப்பட்ட வானதூதர்கள் எங்கே போயினர்?
கடலிலிருந்து எழுந்து வந்து மனிதர்களை அச்சுறுத்திய விலங்குகள் போல, இன்றும் நம்மைச் சுற்றி அச்சுறுத்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அன்று வந்த தொன்மை வாய்ந்தவர் இன்று எங்கே போனார்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில், நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள். இன்று நாம் செயற்கைக்கோள்கள் வைத்திருந்தும் நம்மால் கணிக்க இயலவில்லை. இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யிலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும்.
இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.
இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?
(அ) தேர்ந்து தெளிதல்
ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். ‘இது அல்ல! இது அல்ல!’ என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
(ஆ) காரணம் – காரியம்
இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் – காரியம் என்றே நகர்கின்றன. ‘காரணம் – காரியத்திற்கு’ அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.
(இ) என் வார்த்தைகள் ஒழியா!
தன் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தன் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Leave a comment