இன்றைய இறைமொழி. ஞாயிறு, 22 டிசம்பர் ’24. அன்பின் வருகை

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 22 டிசம்பர் ’24
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
மீக்கா 5:2-5அ. திருப்பாடல் 80. எபிரேயர் 10:5-10. லூக்கா 1:39-45

அன்பின் வருகை

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி – ‘வானதூதரின் மெழுகுதிரி’ என்று அழைக்கப்படுகிறது – அன்பு என்னும் மதிப்பீட்டைக் குறித்துக் காட்டுகிறது. ‘ஆண்டவரே, அமைதியை அருள்வார்!’ என்று மிக அழகாக இன்றைய முதல் வாசகத்தில் பதிவு செய்கிறார் இறைவாக்கினர் மீக்கா. அமைதி அன்பில் கனிகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் வருகை கொண்டுவரும் உணர்வு பற்றிப் பேசுகின்றது: முதல் வாசகத்தில், இஸ்ரயேலை ஆளப்போகின்ற அரசர் பெத்லகேமிலிருந்து வருகின்றார். இரண்டாம் வாசகத்தில், மனுக்குலத்தை மீட்க வந்த தலைமைக்குருவான இயேசு தன் இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு வருகின்றார். நற்செய்தி வாசகத்தில், நாசரேத்தூரிலிருந்த கன்னி மரிய யூதேயா மலைநாட்டிலுள்ள தன் உறவினர் எலிசபெத்து நோக்கி வருகின்றார்.

(அ) அன்பின் அரசர்

இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர் மீக்கா யூதாவாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவருகிறார். தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா கிமு 8-ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த ஊர் எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர் நிறைப் பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத் தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு நெருடலாகவே இருந்தார்.

இன்றைய வாசகம் மீக்கா நூலின் ‘தலைமைத்துவப் பிரச்சினை’ என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘அரசன் உன்னிடத்தில் இல்லாமல் போனானோ?’ (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இறைவாக்கினர். யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி, வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல் எல்லா மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும் துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் புதிய அரசரின் வருகையை முன்மொழிகிறார் மீக்கா. இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு வெளியே இருந்து வருவார். எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள் எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும் கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க வைப்பதால் மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்: ‘எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.’ மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக மீக்கா முன்வைப்பது: ‘அவர் தம் மந்தையை மேய்ப்பார்.’ இதுவரை இருந்த எருசலேம் மைய அரசர்கள் மந்தையை மேய்ந்தார்களே அன்றி, மந்தையை மேய்க்கவில்லை. தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக அமைதியை மீக்கா முன்வைக்கின்றார்.

ஆக, அரசர் பெத்லகேமிலிருந்து எருசலேம் வருகின்றார். மக்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்கள் நாடு திரும்புகிறார்கள். அரசர் தன் மந்தையை ஆயராக இருந்து மேய்க்கின்றார். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீக்காவின் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான் ஞானியர் ஏரோதிடம் வரும் நிகழ்வில் மறைநூல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர் (காண். மத் 2:2). மத்தேயு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் மீக்காவின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. ஏனெனில், இயேசு பெத்லகேமில் பிறக்கின்றார். இன்னொரு வகையில் ‘பெத்லகேம்’ என்பது தாவீதின் ஊர் என்று புரிந்துகொள்ளும்போது, இயேசு ‘தாவீதின் மகன்’ என்னும் தலைப்பு பொருத்தமாக இருக்கிறது.

(ஆ) அன்பின் தலைமைக்குரு

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச் செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், ‘இயேசு மனித உடல் ஏற்ற நிகழ்வை’ பதிவு செய்கின்றார். இயேசு மனுவுடல் ஏற்கும் நிகழ்வு இறைத்திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வாக உள்ளது. இயேசு மனுக்குலத்திற்கு வரும் நிகழ்வும், மனுக்குலத்தை விட்டு இறைத்தந்தையிடம் செல்லும் நிகழ்வும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வுகளாக அமைந்துள்ளன.

யூத வழிபாட்டில் பலிகள் முதன்மையான இடம் பெற்றிருந்தன. லேவியர் மற்றும் இணைச்சட்ட நூல்களில் பல பகுதிகள் பலிகள் பற்றியும், பலிகள் நிறைவேற்றுவதற்கான முறைமைகள் பற்றியும் பேசுகின்றன. இறைவாக்கினர்களின் காலத்தில் பலிகள் சடங்குகளாக மாறியதால், கடவுளே அவற்றை வெறுக்கின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை தன் சமகாலத்து யூதர்களுக்கு அறிமுகம் செய்யும்போது, யூத சமயத்தில் விளங்கிய முதன்மையான அடையாளங்களான தலைமைக்குரு, ஆலயம், திரைச்சீலை, பலிகள் ஆகியவற்றின் வழியாக அறிமுகம் செய்கின்றார்.

இயேசுவுக்கு கடவுள் ஓர் உடலை அமைத்துக் கொடுக்கின்றார். அதே உடலை இயேசு சிலுவையில் கையளித்து, உயிர்ப்பின் வழியாக மீண்டும் பெற்றுக்கொள்கின்றார். எருசலேம் ஆலய வழிபாட்டில் தலைமைக்குரு, பலி செலுத்தும் வேளையில் உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டே இருப்பார். திரைச்சீலையைக் கடந்து அவர் உள்ளே செல்லும்போது பலியுடன் செல்வார். வெளியே வரும்போது பலி செலுத்துபவருக்கான அருளைக் கொண்டுவருவார். இயேசு பலிகளையும் கடந்து இறைத்தந்தையின் திருவுளப்படி நடக்கின்றார். அதாவது, பலியை அன்று, கீழ்ப்படிதலையே ஆண்டவராகிய கடவுள் விரும்புகிறார் என்று இறைவாக்கினர் சாமுவேல் அரசர் சவுலுக்குச் சொல்வதை (காண். 1 சாமு 9), இயேசு நிறைவேற்றுகின்றார்.

ஆக, இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், உயிர்ப்புக்குப் பின்னர் கடவுளிடம் ஏறிச் சென்றதும் மனுக்குலத்திற்கு மீட்பு தரும் நிகழ்வுகளாக உள்ளன.

(இ) அன்பின் தாய்

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து மறைந்தவுடன், தன் உறவினர் எலிசபெத்தை தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர் சொன்ன ‘எலிசபெத்து’ அறிகுறி சரியா என்று பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? ‘எழுந்தாள். ஓடினாள். நுழைந்தாள். வாழ்த்தினாள்’ – என இரண்டு வசனங்களுக்குள் மரியாளின் நீண்ட பயணத்தை அடக்கி விடுகிறார் லூக்கா.

இந்தப் பகுதியில் எலிசபெத்து பேசும் வார்த்தைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மரியா மூன்று செயல்கள் செய்கின்றார்: (அ) விரைந்து செல்கின்றார், (ஆ) வாழ்த்துகின்றார், மற்றும் (இ) மௌனம் காக்கின்றார். எலிசபெத்து மரியாவை மூன்று அடைமொழிகளால் வாழ்த்துகிறார்: (அ) ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர்,’ (ஆ) ‘ஆண்டவரின் தாய்,’ மற்றும் (இ) ‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியவர்.’ ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என நம்பியதால் கன்னி மரியா ஆண்டவரின் தாயாக உயர்கின்றார். ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்னும் மரியாவின் சரணாகதியே அவரை இந்நிலைக்கு உயர்த்துகின்றது.

ஆக, மரியாவின் வருகை எலிசபெத்துக்கும் அவருடைய வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மகிழ்ச்சி தருகின்றது.

அரசரின் வருகை, இயேசுவின் வருகை, மற்றும் மரியாவின் வருகை என்னும் மூன்று வருகைகளும் அன்பின் மூன்று பண்புகளை நமக்கு எடுத்துரைக்கின்றன:

(அ) அன்பு பொறுப்பேற்கிறது

இஸ்ரயேலை ஆள்கிற பெரிய அரசர் சிறிய ஊரிலிருந்து தோன்றுகிறது. சிறியதாக இருக்கிற ஒன்று, பெரியதாக, வலிமை மிக்கதாக மாறுகிறது. அன்பின் இயல்பும் அதுவே. மிகவும் சிறிய உணர்வாக அல்லது செயலாகத் தொடங்கி பெரியதாக, வலிமை மிக்கதாக மாறுகிறது. ஆக, சிறிய செயல்கள் வழியாகவே அன்பைக் கட்டியெழுப்ப முடியும். அன்பில் வளரும் ஒருவர் தான் அன்பு செய்கிறவர்மேல் பொறுப்பு ஏற்கிறார். பெத்லகேமிலிருந்து தலைவராக எழுகிற அரசர் ‘மந்தையை மேய்க்கிறார்’ – அதாவது, மந்தைக்கு உணவும், பாதுகாப்பும் தருகிறார். அன்பு நம் பொறுப்புணர்வைத் தூண்டி எழுப்புகிறது. இந்தப் பொறுப்புணர்வின் வழியாகவே நாம் அன்பு செய்கிறவரின் வளர்ச்சிக்குத் துணைநிற்கிறோம். மற்றவரை மேய்வதில் அல்ல, மாறாக, மற்றவரை மேய்ப்பதில்தான் அன்பு அடங்கியுள்ளது. இன்று பல நேரங்களில் அன்பு உறவுகளில், ‘இந்த அன்பு உறவால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என்றும், ‘இவருடைய உடனிருப்பால் நான் எப்படி வளர்ந்துகொள்ள முடியும்?’ என்றும் நினைக்கிறோம். இப்படி நினைக்கும்போது நாம் அன்பு பாராட்டுவதில்லை. மாறாக, வியாபாரம் செய்கிறோம்.

(ஆ) அன்பு தன்விருப்பம் தவிர்க்கிறது

‘உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்!’ என்று கிறிஸ்து தந்தையிடம் சொல்வதாக எழுதுகிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். உடலற்ற கடவுள் மனித உடல் ஏற்கிறார். அன்பிலும் இதுவே நடக்கிறது. அன்பு என்னும் உணர்வு காணக்கூடிய, உடலால் தொட்டு உணரக்கூடிய ஒரு நபராக மாறுகிறது. அன்பில் ஒருவர் தன் விருப்பம் அகற்றி மற்றவர் விருப்பம் ஏற்கிறார். இதையே பவுல், ‘அன்பு தன்னலம் நாடாது’ (1 கொரி 13:5) என்று எழுதுகிறார். கடவுளை நாம் அன்பு செய்கிறோம் எனில், கடவுளின் திருவுளம் நம்மில் நிறைவேற நாம் அனுமதி தர வேண்டும். நம் விருப்பு வெறுப்புகளைச் சற்றே அகற்றிவிட்டு, மற்றவரின் விருப்பத்தை முன்நிறுத்திப் பார்க்க முயற்சி செய்வோம்.

(இ) அன்பு மற்றவரை நோக்கி ஓடுகிறது

வானதூதர் தன் இல்லம் விட்டு அகன்றவுடன் கதவுகளைப் பூட்டியும் பூட்டாமலும் எலிசபெத்தின் இல்லம் நோக்கி ஓடுகிறார் மரியா. விளைவாக, தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை எலிசபெத்தோடும் அவருடைய வயிற்றிலிருந்த குழந்தையோடும் பகிர்ந்துகொள்கிறார். ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று வானதூதரை நோக்கிச் சொன்ன மரியா, ‘நான் உம் அடிமை’ என்று எலிசபெத்துக்குப் பணிவிடை ஆற்றத் தயாராகிறார். அன்பின் இயல்பு என்னவெனில், வலிமையாக இருக்கும் ஒருவரின் வலிமையைக் குறைத்துவிடுவதுபோலத் தோன்றினாலும், அது புது வகையான வலிமையை ஒருவருக்குத் தருகிறது. கடவுள் நம்மேல் கொண்ட அன்பு நம் வலிமையைக் குறைக்கவில்லை. மாறாக, அவருடைய உடனிருப்பின் வழியாக நாம் வலிமை பெறுகிறோம்.

கடவுள் இந்த உலகின்மேல் கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை நமக்கு அளிக்கத் திருவுளம் கொள்கிறார். மரியாவின் அன்பு தேவையிலிருக்கும் எலிசபெத்து நோக்கி அவரை நகர்த்துகிறது. மரியா தன் உறவினரைத் தேடி நீண்டதொரு பயணம் செய்கின்றார். கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ‘எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்’ என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80), ‘நாட்டின் புதுவாழ்வுக்காக’ மன்றாடும் ஆசிரியர், ‘உமது வலக்கை நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!’ என வேண்டுதல் செய்து, ‘இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்’ என வாக்குறுதி தருகிறார். கரங்களைப் பிடித்துக்கொள்ளும் நாம் மற்றவர்களுக்கு நம் கரங்களை நீட்டும்போது நாமும் அன்பை ஏந்திச் செல்பவர்களே!

இன்று நாம் ‘அன்பு’ என்னும் திரியை ஏற்றும்போது, இத்திரி நம் உள்ளத்தில் உள்ள அன்பையும் பற்றியெரியச் செய்ய வேண்டும் என இறைவேண்டல் செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment